முக்கொம்பு காவிரியாற்றில் ஞாயிற்றுக்கிழமை மூழ்கி பலியான எஸ்எஸ்எல்சி மாணவி 341 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
திருச்சி எடமலைப்பட்டி புதூரைச் சேர்ந்தவர் ரெங்கசாமி(38). இவருடைய மனைவி முத்துக்கண்ணு (35). இவர்களது, மகன் தரண்(17), மகள் கிருத்திகா(15), சித்தி சந்திரா(35), அவரது மகன் ஹரிஹர தீபக் (8) ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை முக்கொம்பு சுற்றுலா மையத்திற்குச் சென்றனர். அங்கு காவிரி ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது கிருத்திகா, தரண், ஹரிஹர தீபக் ஆகியோர் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினர்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த முத்துகண்ணு, சந்திரா கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தண்ணீரில் மூழ்கிய 3 பேரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
வழியிலேயே கிருத்திகா, ஹரிஹர தீபக் இருவரும் உயிரிழந்தனர். தரண் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.
உயிரிழந்த மாணவி கிருத்திகா, திங்கள்கிழமை வெளியான தேர்வு முடிவில் 341 மதிப்பெண்கள் பெற்றது தெரியவந்த அவரது பெற்றோர், உறவினர்கள் பெரிதும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.