ரமலான் நோன்புக்கு அரசு சார்பில் வழங்கப்படும் அரிசியை உடனே வழங்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே. எம்.காதர் மொகிதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் மிக முக்கியமானதான ரமலான் நோன்பு 30 நாள்கள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
நோன்புக் கஞ்சி காய்ச்சுவதற்கு தேவையான விலையில்லா அரிசியை தமிழக அரசு அனைத்துப் பள்ளிவாசல்களுக்கும் கடந்த பல ஆண்டுகளாக வழங்கி வருகிறது. இந்தாண்டு நோன்பு கஞ்சிக்கு தேவையான அரிசியை தமிழக அரசு இதுவரை வழங்கவில்லை. காரணம் தேர்தல் நடத்தை விதிகளாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
நோன்புக் கஞ்சிக்கு அரிசி வழங்குவது தமிழக அரசின் புதிய அறிவிப்பு இல்லை, பன்னெடுங்காலமாக இருந்து வரும் நடைமுறையாகும். இது குறித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம் முஹம்மது அபுபக்கர், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை, வக்ஃபு வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு அனைத்து பள்ளிவாசல்களுக்கும் நோன்பு கஞ்சிக்கு தேவையான அரிசி வழங்கிட வலியுறுத்தி உள்ளார்.
எனவே, தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுத்து நோன்பு கஞ்சிக்கு தேவையான அரிசியை உடன் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.