துவரங்குறிச்சி அருகே ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநர் உயிரிழந்தார்.
சிவகங்கை மாவட்டம், கல்லூரணி பகுதியைச் சேர்ந்தவர் லெட்சுமணன் மகன் பரமசிவம் (58). இவர், பயணிகள் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இவர், தனது ஆட்டோவில் குடும்பத்துடன்
விராலிமலை அருகேயுள்ள மேலபச்சக்குடி கிராமத்தில் உள்ள கோயிலுக்கு சென்றார். செவ்வாய்க்கிழமை மாலை வீடு திரும்பிய நிலையில், திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே உள்ள யாகபுரம் அருகே ஆட்டோ, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பரமசிவம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் பரமசிவம் உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் பரமசிவம் குடும்பத்தினர் சாந்தி(50) மற்றும் சுசீலா(54) ஆகியோர் படுகாயங்களுடன் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து வழக்கு பதிந்து போலீஸார் விசாரிக்கின்றனர்.