திருச்சியில் வாடகை தருவதாகக் கூறி கார்களை எடுத்துச்சென்று அடகு வைத்து ரூ. 25 லட்சம் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகர காவல் துணை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அரியமங்கலம் திடீர் நகரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் சந்த்ரூ மற்றும் புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த விஜய். இருவரும் தில்லைநகர் 3 ஆவது குறுக்குச்சாலையில் லஷ்மி காஸ்மிட்டிக் எனும் பெயரில் கடை வைத்துள்ளனர். இருவரும் சேர்ந்து மாத வாடகை தருகிறோம் என்று கூறி, பலரிடமிருந்து சுமார் 10-க்கும் மேற்பட்ட கார்களை வாடகைக்கு எடுத்துள்ளனர். கடந்த 5 மாதங்களாக வாடகை தராமலும், கார் உரிமையாளர்களுக்கு தெரியாமல் கார்களை அடகு வைத்து ரூ. 25 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளன.
அரியமங்கலம் காவல் நிலையத்தில் மட்டும் இதேபோல் 5 புகார்கள் அளிக்கப்பட்டு கடந்த 4 மாதமாக விசாரனை நடைபெற்றுவருகிறது. மேலும் கோட்டை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார் மனு விசாரணையில் உள்ளது. இதுதவிர திருச்சியைச் சேர்ந்த காளிமுத்து, தினேஷ் குமார் ஆகியோர் செவ்வாய்க்கிழமை திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் என்.எஸ். நிஷாவை சந்தித்து அளித்த மனுவில், சந்த்ரூ மற்றும் விஜய் ஆகியோரைக் கைது செய்து அடகு வைத்த கார்களை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.