18 வயது நிரம்பியவுடன் ஓட்டுநர் உரிமம் வழங்குவதைவிட அவர்களுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து முறையான பயிற்சி வழங்க வேண்டும் என்றார் திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு.
திருச்சியில் ஹோண்டா நிறுவனத்தில் சார்பில் பழைய ஆட்சியரக அலுவலக வளாகத்தில் உள்ள சிறுவர்களுக்கான போக்குவரத்து பூங்காவில் சாலை பாதுகாப்பு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஹோண்டா இரு சக்கர வாகனம் (தகவல் பிரிவு)துணைத் தலைவர் பிரபு நாகராஜ் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் சு. சிவராசு மேலும் பேசியது:
போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் கடைப்பிடிக்கும் வகையில், ஏற்படுத்தப்படும் விழிப்புணர்வு திட்டங்களை அமலாக்கும் அதிகாரிகளைத் தொடர்ந்து பொறுப்புக்கு வரும் அதிகாரியும் செயல்படுத்தினால் மட்டுமே திட்டம் வெற்றி பெறும். 18 வயது நிரம்பியவுடன் ஓட்டுநர் உரிமம் வழங்குவதைவிட அவர்களுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து முறையான பயிற்சி வழங்க வேண்டும். திட்டங்கள் வெற்றிபெற காவல் துறை மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் ஒத்துழைப்பு அவசியம் என்றார்.
மாநகர காவல்துறை ஆணையர் அ.அமல்ராஜ்: போக்குவரத்து விதிமீறல்களால் அதிகளவில் விபத்துகள் நடைபெறுகிறது. இதில் பெருமளவில் இளைஞர்கள் உயிரிழப்பது வருத்தமளிக்கிறது. போக்குவரத்து விதிமுறைகள் குறித்து முறையான பயிற்சி அளிக்கப்பட்ட பிறகு தான் அதற்கான சான்றிதழைப் பெற்ற பிறகு ஓட்டுநர் உரிமம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோர், ஓட்டுநர் உரிமம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு இலவசமாகப் பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்நிகழ்வில், மாநகர காவல்துறை துணை ஆணையர் நிஷா, ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பிரபாகரன், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டவர்கள், ஓட்டுநர் உரிமம் கேட்டு விண்ணப்பித்தவர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.