திருட்டு, குற்றத்தடுப்பு விழிப்புணர்வு
துறையூர் காவல் துறை சார்பில் திருட்டு குற்றத்தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் தனியார் திருமண மண்படத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
துறையூர் சாமிநாதன் நகரில் அடுத்தடுத்து நடைபெற்ற திருட்டு சம்பவங்களை தொடர்ந்து காவல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு கூட்டத்துக்கு துறையூர் காவல் நிலைய ஆய்வாளர் குருநாதன் தலைமை வகித்தார். நூற்றுக்கும் மேற்பட்ட சாமிநாதன் நகரில் வசிப்போர் பங்கேற்றனர்.
வெளியூர் செல்கிறபோதும், சந்தேகப்படும்படியாக யாராவது நடமாடினாலும் காவல்துறைக்கு உடனே தகவல் தரவேண்டும். வீட்டின் முன், பின் பகுதிகளில் இரவு நேரங்களில் ஒரு மின் விளக்கை எரியவிட வேண்டும். இரவில் காற்று வேண்டி புறக்கதவுகளைத் திறந்து வைத்துவிட்டு உறங்கக் கூடாது.
தனியாக இருக்கும்பெண்கள் முன்பின் தெரியாதவர்கள் குடிநீர் கேட்டும், முகவரி தெரிய வேண்டியும் உதவி கோரினால் அவர்களிடம் பேசக் கூடாது என்று கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் வலியுறுத்தப்பட்டு அதுகுறித்த துண்டு பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.