ரக்ஷா பந்தன் தினத்தையொட்டி பள்ளி மாணவிகள் படைவீரர்களுக்கு சிறப்பு அஞ்சல் உறை அனுப்பும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
ரக்ஷா பந்தன் தினத்தையொட்டி அஞ்சலகங்களில் விற்கப்பட்டு வரும் ரக்ஷா பந்தன் (ராக்கி) சிறப்பு அஞ்சல் உறையைப் பள்ளி மாணவ, மாணவிகள் அனுப்பும் நிகழ்வு ஆண்டுதோறும் திருச்சியில் நடைபெறுவது வழக்கம்.
இதேபோன்று திருச்சி பறவைகள் சாலையில் உள்ள வாசவி வித்யாலயா பள்ளி வளாகத்தில் சிறப்பு அஞ்சல் உறை அனுப்பும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பள்ளியில் படிக்கும் 100 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பு அஞ்சல் உறையை இந்திய எல்லை படைவீரர்களுக்கு அனுப்பினர்.
இதில், திருச்சி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் இரா. கணபதி சுவாமிநாதன், துணை அஞ்சல் அதிகாரி குழந்தைராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.