திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே குடிநீர்க் கேட்டு பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் முயற்சியில் ஈடுபட்டனர்.
தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் முள்ளிப்பாடி ஊராட்சிக்குட்பட்ட திருஈங்கோய்மலை மேற்கு மற்றும் கிழக்கு பகுதி, திருமலையூர், நாச்சியார்புதூர் ஆகிய பகுதிகளுக்கு கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக காவிரி குடிநீர் வழங்கப்படவில்லை.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலர் மற்றும் தண்ணீர் திறந்து விடுபவர்களிடம் பொதுமக்கள் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் திருச்சி - சேலம் சாலையில் திருஈங்கோய்மலை மலைப்பாதை பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலை மறியல் செய்வதற்காக திரண்டனர்.
தகவலறிந்த முள்ளிப்பாடி முன்னாள் ஊராட்சித் தலைவரின் கணவர் சுப்பு (எ) சுப்பிரமணியன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர், முள்ளிப்பாடி ஊராட்சி செயலர் சங்கர் ஆகியோர் வந்து காவிரி குடிநீர் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுத்து இரு தினங்களுக்குள் குடிநீர் வழங்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.