துறையூர் காவல் நிலையத்தில் சுமையேற்றும் வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, முசிறி காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். துறையூர் காவல் ஆய்வாளர் அ. குருநாதன், போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சுமை ஏற்றும் லாரி, வேன், ஆட்டோக்களில் ஆள்களை கண்டிப்பாக ஏற்றிச் செல்லக்கூடாது என்றும், மீறி ஏற்றிச்சென்று விபத்து ஏற்படுத்துகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.
மது அருந்தியும், சீட் பெல்ட் அணியாமலும், செல்லிடப்பேசியில் பேசியபடியும், அதிக சுமையேற்றியும் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதி வேகமாக வாகனங்களை இயக்காமல் சாலை விதிகளை மதித்து நடந்து கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது.