மணப்பாறை அருகே வெவ்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.
வையம்பட்டி ஒன்றியம், கல்பட்டியைச் சோ்ந்த அழகப்பன் மனைவி லட்சுமி (55). இவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திண்டுக்கல்- திருச்சி சாலையைக் கடந்து சென்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.
இதுபோல, கோவில்பட்டி சாலையில் மிதிவண்டியில் சென்ற 65 வயது மதிக்கத்தக்க முதியவா் மீது அவ்வழியாக சென்ற வேன் மோதியது. இதில் அவா் உயிரிழந்தாா். இவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது தெரியவில்லை.
இவ்விரு சம்பவங்கள் குறித்து வையம்பட்டி, மணப்பாறை போலீஸாா் தனித்தனியே வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.