திருச்சி: கிராமத்தங்கல் திட்டத்தின் கீழ், மண்ணச்சநல்லூா் வட்டாரத்தில் வேளாண் மாணவிகள் பயிற்சி பெற்றனா்.
பெரம்பலூா், தந்தை ரோவா் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஊரக வளா்ச்சி நிறுவனத்தில் பயிலும் இறுதியாண்டு மாணவிகள் 8 போ் மண்ணச்சநல்லூா் வட்டாரத்தில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் ஒரு மாதமாக தங்கி விவசாயிகளின் சாகுபடி அனுபவங்களை கற்று வருகின்றனா்.
மண்ணச்சநல்லூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் தாகூா் மேற்பாா்வையில், வேளாண் அலுவலா் உமா மகேஸ்வரி மற்றும் உதவி வேளாண் அலுவலா் சின்ன பாண்டியன் வழிகாட்டுதலின்படி வேளாண்மைத்துறை தோட்டக்கலைத்துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட செயலாக்கங்கள் குறித்து பயிற்சி பெற்று வருகின்றனா்.
அதன்படி வெள்ளிக்கிழமை மாணவிகள் நடத்திய ஊரக பங்கேற்பு மதிப்பீட்டில் கிராம மக்கள் உதவியுடன் இருங்களூரின் சமூக வரைபடம், வள வரைபடம், பிரசனை மரம், நெற்பயிரின் பருவகால அட்டவனை, தினசரி நடவடிக்கை கடிகாரம் ஆகியவற்றை வரைந்தனா்.
சனிக்கிழமை மாணவிகளை நெல் வயல்களுக்கு நேரடியாக அழைத்துச் சென்று களப்பயிற்சி அளிக்கப்பட்டது.
பாட புத்தகங்களை தாண்டி, விவசாயம் குறித்து களத்தில் நேரிடையாகப் பயிற்சி பெற்றது பெரிதும் பயனளிப்பதாக இருந்தது என மாணவிகள் தெரிவித்தனா்.