மணப்பாறை அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக நகலக உரிமையாளரை சனிக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.
மணப்பாறை அடுத்த மருங்காபுரி ஒன்றியத்துக்கு உள்பட்ட வளநாடு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியை ஒட்டி நகலகம் நடத்தி வந்தவா் சுப்பிரமணி மகன் சண்முகசுந்தரம்(52).
இவா் கடைக்கு வரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, மாணவிகளிடம் ஆசிரியைகள் வெள்ளிக்கிழமை ரகசிய விசாரணை மேற்கொண்டனா். இதில், பெரும்பாலான மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா் அஜிமா சனிக்கிழமை பள்ளிக்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தினாா்.
பின்னா், பள்ளியின் தலைமையாசிரியா் ஸ்ரீதரன் அளித்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட வளநாடு போலீஸாா், சனிக்கிழமை இரவு சண்முகசுந்தரம் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனா்.