ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பள்ளியோடத் திருநாள் எனும் தெப்பத் திருவிழாவின் 4 ஆம் நாளான திங்கள்கிழமை மாலை நம்பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதை வழிநெடுக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஆண்டுதோறும் ஒரே ஒருமுறை மாசி மாதத்தில் வரும் தெப்ப உற்ஸவத்தின்போது மட்டும் நம்பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதிப்பார். நிகழாண்டில் தெப்ப உற்ஸவத்தின் 4 ஆம் நாளான திங்கள்கிழமை மாலை நம்பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் எழுந்தருளினார். இதற்காக நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு உள்திருவீதி வலம் வந்து வழி நெடுக உபயங்கள் கண்டருளி மேலூர் ரோட்டில் உள்ள காசுக்கடை செட்டியார் ஆஸ்தான மண்டபத்தை பகல் 12.30 மணிக்கு அடைந்தார்.
பின்னர் மேற்படி மண்டபத்திலிருந்து மாலை 6 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி உள்திருவீதி வலம் வந்தார். மாசி மாத வெள்ளி கருட சேவையை தரிசனம் செய்தால் காசிக்குச் சென்று வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனையொட்டி வழிநெடுக ஆயிரக்கணக்கான பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.
இரவு 9 மணிக்கு வாகன மண்டபத்தை அடைந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேர்ந்தார் நம்பெருமாள். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா வரும் 15 ஆம் தேதி நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.