திருச்சி மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய சோதனையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சி பெரியக்கடை வீதி, ஜாபர்ஷா தெரு, காந்தி மார்க்கெட் போன்ற பகுதிகளில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்களில் மாநகராட்சி ஆணையர் ந.ரவிச்சந்திரன் உத்தரவின்படி, நகர்நல அலுவலர் எஸ். ஜெகநாதன், அரியமங்கலம் உதவி ஆணையர் துரைமுருகன், சுகாதார ஆய்வாளர் இ.பரசுராமன், அலுவலர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சில கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள நெகிழிப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுபோல, ஸ்ரீரங்கம் கோட்டத்துக்குள்பட்ட அம்மாமண்டபம், சாலை ரோடு, ராஜகோபுரம், சத்திரம் பேருந்து நிலையப் பகுதிகளில் கேட்பாரற்று சுற்றித்திரிந்த 7 மாடுகளை சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள் அடங்கிய குழுவினர் பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.
துணிப்பை போன்ற நெகிழிப் பைகளுக்கும் தடை
அரசு உத்தரவின்படி மாவட்டத்தில் பொதுமக்களும் பாலி எத்தலீனால் உருவாக்கப்பட்ட நெகிழிப் பைகளுக்கு மாற்றாக துணிப்பைகளைப் பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
எனினும் கடைகளில் பாலிபுரப்பலீன் வகையிலான நெகிழிப் பைகளை பயன்படுத்துவதை தொடங்கியுள்ளனர். பாலிப்புரப்பலீன் பை என்பது நெய்யப்படாத நெகிழி கைப்பையாகும். இந்த வகை பைகளை பெரும்பாலும் இனிப்பு அங்காடிகள், மருந்தகம், உணவகம், துணிக்கடைகளில் பயன்படுத்துவதாக தெரிய வருகிறது. இந்த பகைகளும் தடை செய்யப்பட்ட பைகள்தான். எனவே, இவற்றை இனி பயன்படுத்தக் கூடாது என ஆட்சியர் கு.ராசாமணி எச்சரித்துள்ளார்.