திருச்சியில் ரூ. 1 கோடி கேட்டு விடுதலைச்சிறுத்தைகள் கட்சிப் பிரமுகர் மற்றும் தொழிலதிபரைக் கடத்திய மர்ம கும்பலைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
திருச்சி கே. கே. நகர், சிம்கோ தொழிற்சாலை அருகேயுள்ள கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் ராஜா என்கிற அழகர்சாமி (45). இவர், தனது தம்பி ரமேஷ் குமாருடன் சேர்ந்து, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் வணிகர் அணி மாநில துணைச் செயலாளராக உள்ளார்.
திங்கள்கிழமை இரவு 8 மணியளவில், மன்னார்புரத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது 2 கார்களில் வந்த 7 பேர் கொண்ட கும்பல், அழகர்சாமி சென்ற காரை மறித்து, அரிவாள் மற்றும் கத்தி முனையில் மிரட்டி காரில் கடத்திச் சென்றனர்.
மேலும், அவரிடமிருந்த ரொக்கம் ரூ. 4 லட்சம், அணிந்திருந்த சங்கிலி உள்ளிட்ட 18 பவுன் நகைகளை பறித்துக் கொண்டனர். பின்னர், விராலிமலை அருகே அவரை இறக்கிவிட்டு மேலும் ரூ.1 கோடி தர வேண்டும் என அந்த கும்பல் மிரட்டிச் சென்றுள்ளது.
கும்பலிடமிருந்து தப்பி வந்த அழகர்சாமி கே.கே. நகர் போலீஸில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கடத்தல் கும்பலைத் தேடி வருகின்றனர்.