வையம்பட்டி அருகிலுள்ள மட்டப்பாறைப்பட்டி அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில் முன்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகள் இடிக்கப்பட்டன.
இக்கோயில் முன்பு இருந்த வணிக ரீதியிலான கடைகளுக்கு உயர் நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகு மாற்று இடம் அளிக்கப்பட்டது. ஆனாலும், சில கடைகளின் உரிமையாளர்கள் மீண்டும் பழைய இடத்திலேயே கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்
அளிக்கப்பட்டும் யாரும் ஆக்கிரமிப்பு செய்த கடைகளை அகற்றிக் கொள்ளவில்லை. இதைத் தொடர்ந்து உதவி ஆணையர் ராணி தலைமையில், செயல் அலுவலர்கள் பிரபாகரன், ரவிச்சந்திரன், ராமநாதன், ஜெய்கிஷன், ஆய்வாளர்கள் உதயகுமார், பிரேமலதா, பரந்தாமன் முன்னிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
கோயில் முன்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த இரு கடைகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கப்பட்டன. மீட்கப்பட்ட இடம் கோயில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.