திருச்சி அருகே இளம்பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய இளைஞருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி மகளிர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
திருச்சி இனாம்புலியூரைச் சேர்ந்த விவசாயி முருகன் (27) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் கர்ப்பிணியான அப்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்ட போது அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதையடுத்து அப்பெண் ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் புதன்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி மகிழேந்தி, விவசாயி முருகனுக்கு 12 ஆண்டு, ஒரு மாத சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையை செலுத்தத் தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.