திருச்சி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை மயங்கி விழுந்து இறந்ததில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
கருமண்டபம் விஸ்வாஸ் நகரில் வசித்து வருபவர் பெருமாள் மகன் சௌந்தரபாண்டியன்(60).இவரது மனைவி திலகம்(54). இருவரும் கட்டடத் தொழிலாளிகள். திலகம், எடமலைப்பட்டி புதூரில் உள்ள காவலர் ஒருவரின் அடுக்குமாடிக் குடியிருப்பில் அண்மையில் வேலை பார்த்தபோது தவறி விழுந்து இறந்து விட்டாராம். இது குறித்த விபரத்தை கேட்பதற்காக எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்துக்கு சௌந்தரபாண்டியன் சென்று கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது, சௌந்தரபாண்டியன் காவல்நிலைய வளாகத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவர் திருச்சி தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் கூடிய அவரது உறவினர்கள் சௌந்தரபாண்டியன் சாவில் மர்மம் இருப்பதாகவும் தெரிவித்தனர்.இதுகுறித்து சௌந்தரபாண்டியனின் மகன் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.