திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் கட்டடக் கலைத்துறை சார்பில் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.
கட்டடக்கலை மற்றும் கட்டுமானபொறியியல் துறைகளின் ஆற்றல்திறமை மற்றும் நிலையான வளர்ச்சிக்கான சமீபத்திய போக்குகள் எனும் தலைப்பில் 3 நாள்கள் நடைபெறும் இக் கருத்தரங்கின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவை, என்ஐடி இயக்குநர் மினி ஷாஜி தாமஸ் தொடக்கி வைத்தார். புதுதில்லியைச் சேர்ந்த கட்டடக் கலை கவுன்சில் தலைவர் விஜய் கர்க் சிறப்புரையாற்றினார். முனைவர்கள் கே.திருமாறன், எல். சாய்கலா, ஏ.மீனாட்சிசுந்தரம் ஆகியோர் கருத்தரங்கின் நோக்கங்கள் குறித்து விளக்கிப் பேசினர். இதில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், பொறியாளர்கள், வல்லுநர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.