திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி சிவாலயத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் சனிக்கிழமை அகற்றப்பட்டது.
மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட ராஜீவ் நகரில், ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் சிவாலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் கட்டடப் பகுதிகள் குளத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, ஆக்கிரமிப்பு பகுதிகள் ஸ்ரீரங்கம் சார் ஆட்சியர் சிபி. ஆதித்ய செந்தில்குமார், வருவாய் வட்டாட்சியர் சித்ரா, நகராட்சி ஆணையர்(பொ) மனோகரன் ஆகியோர் தலைமையில் வருவாய்த் துறையினர், நகராட்சி ஊழியர்கள் சிவாலயத்தில் இருந்த முகப்பு மேற்கூரைகள், மடப்பள்ளி கட்டடம் ஆகியவற்றை பொக்லைன் இயந்திரம் கொண்டு அகற்றினர்.
காவல் துணை கண்காணிப்பாளர் ஷர்மு, காவல் ஆய்வாளர் மனோகர் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முன்னதாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளுடன் அப்பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.