தமிழகத்திலுள்ள 46 சுங்கச்சாவடிகளிலும் தமிழர்களுக்கு மட்டுமே பணி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு சுங்கச்சாவடி பணியாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த கூட்டமைப்பின் ஏஐடியூசி பிரிவு மாநில மாநாட்டில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டுக்கு ஏஐடியூசி மாநிலச் செயலர் சி. சந்திரகுமார் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் ஜெ. லட்சுமணன் மாநாட்டுக் கொடியேற்றினார்.
பொதுச் செயலர் கே.ரவி தீர்மானங்களை முன்மொழிந்தும், துணைப் பொதுச் செயலர் கே. காரல்மார்க்ஸ் மாநாட்டு அறிக்கையை சமர்ப்பித்தும் பேசினர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மாநிலத்திலுள்ள 46 சுங்கச்சாவடிகளிலும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பை வவங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26,000 வழங்க வேண்டும்.
பல ஆண்டுகளாக பணிசெய்து வரும் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். ஆண்டுதோறும் புதிய ஒப்பந்ததாரர்களை நியமித்து, தொழிலாளர்களின் பணிநிரந்தர உரிமையை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பனஉள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து புதிய நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் ஏஐடியூசி திருச்சி மாவட்டத் தலைவர் க.சுரேஷ், நிர்வாகிகள் எஸ்.அற்புதராஜ்,அகவை.கரு.மணி,ஜெ.விஜயகுமார்,பி.ராஜமாணிக்கம்,பி.பாஸ்கர், எம். இளமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள், சுங்கச்சாவடி பணியாளர்கள் பங்கேற்றனர்.