தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் குடிநீர்த் தட்டுப்பாட்டைத் தீர்க்கும் வகையில், லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது என்றார் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.
திருச்சி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர்த் தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அரசு மருத்துவமனைகளுக்கு மாநகராட்சிகள், நகராட்சிகள் மூலம் லாரிகளில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நவீன வசதிகளுடன் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. ரூ.1,525கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.தமிழகத்தில் சுகாதாரத்துறையின் செயல்பாடுகளை போன்று, 108 ஆம்புலன்ஸ் சேவையும் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. விபத்துகளில் பாதிக்கப்பட்டோருக்கு அவசரச் சிகிச்சைகள் மேற்கொள்ள, குழந்தைகளுக்குச் சிகிச்சையளிக்க, மலைப் பகுதிகளில் செல்ல என 930-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் ஜிபிஎஸ் வசதியுடன் இயங்கி வருகின்றன.
நோயாளிகளை சிகிச்சைக்கு கொண்டு செல்லப் பிரிவு வாரியாக ஆம்புலன்ஸ் சேவை ஏற்படுத்தவும், இதன் எண்ணிக்கையை ஆயிரமாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் விஜயபாஸ்கர்.