தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு வாடகையை உடனடியாக வழங்க வேண்டும் என சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கும்பகோணம் சிஐடியு அலுவலகத்தில் இச்சங்கத்தின் பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அன்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட தனியார் வாகனங்களுக்கு மாவட்ட நிர்வாகம் இதுவரை வாடகை வழங்காமல் உள்ளது. இதனால் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, உடனடியாக தேர்தலுக்காகப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்கு உரிய வாடகையை உடனே தர வேண்டும். மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள சாலை பாதுகாப்பு சட்ட வரைவைத் திரும்பப் பெற வேண்டும். இதை வலியுறுத்தி ஜூலை 9-ம் தேதி நடைபெறும் மாநில அளவிலான ஆர்ப்பாட்டத்தை தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் சிறப்பாக நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் நகரச் செயலர் ரவி தலைமை வகித்தார். மாநிலப் பொருளாளர் குப்புசாமி, மாநிலத் துணைச் செயலர் பார்த்தசாரதி வீரமுத்து, நகரப் பொருளாளர் குருமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.