திருச்சி அரசு மருத்துவமனையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மருத்துவர்கள் சங்கத்தினர் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தலின்பேரில் தமிழகத்தில் குறைக்கப்பட்ட பதவியிடங்களை மீண்டும் அமல்படுத்திட வேண்டும். பட்டய மேற்படிப்பு படிக்கும் மருத்துவர்களுக்கு கலந்தாய்வு முறையில் இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற உண்ணாவிரதத்துக்கு அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மேற்படிப்பு மாணவர்கள் சங்க மாநில பொறுப்பாளர் சாமிநாதன் தலைமை வகித்தார். ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநிலப் பொறுப்பாளர் கேசவன் முன்னிலை வகித்தார். இப்போராட்டத்தில் பெண் மருத்துவர்கள் உள்பட 40 பேர் கலந்து கொண்டனர்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில் வரும் ஜூலை 12 ஆம் தேதி கவன ஈர்ப்பு போராட்டமும், 15 ஆம் தேதி, 16 ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரதமும், 18 ஆம் தேதி புறநோயாளிகள் புறக்கணிப்பு போராட்டமும் நடைபெறும் என இச்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.