இ-சேவை மையங்களை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சியில் இ-சேவை மைய ஊழியர்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதமிருந்தனர்.
அரசு சார்பில் செயல்படும் இ-சேவை மையங்களை மூடக்கூடாது. மையங்களை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது. பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதம் ரூ.18 ஆயிரம் ஊதியம் வழங்குவதோடு,அவர்களது பணியை நிரந்தரமாக்க வேண்டும். சட்டப்படியான உரிமைகளை வழங்க மறுக்கக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடத்தப்பட்டது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு, மாவட்ட அமைப்பாளர் அரவிந்த் தலைமை வகித்தார். சி.ஐ.டி.யூ. புறநகர் மாவட்டச் செயலர் சிவராசு உண்ணாவிரதத்தைத் தொடக்கி வைத்தார். சி.ஐ.டி.யூ. மாவட்டத்தலைவர் பன்னீர்செல்வம் வாழ்த்திப்பேசினார். 20 பெண்கள் உள்பட 50 பேர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். மாவட்டத்திலுள்ள இ-சேவை மையங்கள் வெள்ளிக்கிழமை மூடப்பட்டிருந்தன.
இந்த மையங்கள் வாயிலாக பல்வேறு சான்றிதழ்கள் கோரி விண்ணப்பிக்க முடியாமல் பொதுமக்கள் அவதியுற்றனர். மேலும், சான்றிதழ்களை நகல் எடுக்க வந்த பொதுமக்களும் இ- சேவை மையங்கள் மூடப்பட்டு இருந்ததால் திரும்பிச் சென்றனர்.