திருச்சியில் செந்தண்ணீர்புரம், மகாலெட்சுமி நகர் பகுதிகளில் உள்ள 942 மின் இணைப்புகளில் 40-க்கும் மேற்பட்ட மின்வாரியப் பொறியாளர்கள் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
திருச்சி மின் பகிர்மான வட்ட பெருநகர மேற்பார்வைப் பொறியாளர் எஸ்.ஹரிகுமார் தலைமையில், செந்தண்ணீர்புரம்,மகாலெட்சுமி நகர் மின்வாரிய அலுவலகங்களுக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட மின்வாரியப் பொறியாளர்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். 942 மின் இணைப்புக்கு மேல் ஆய்வு செய்யப்பட்டது. பல மின் இணைப்புகளில் உள்ள மீட்டர் பழுதுகள் உள்ளிட்ட குறைபாடுகள் கண்டறியப்பட்டு அதனைச் சரி செய்ய நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
மின் நுகவர்கள் மின்விதிமீறல்களைச் செய்யாமல் இருக்குமாறும்,மின்சாரத்தை முறையாக பயன்படுத்துமாறும் ஆய்வு நடத்திய வீடுகளில் பொறியாளர்கள் அறிவுரைகளை வழங்கினார்கள். மாநகராட்சிக்கு உட்பட்ட மின்தடை புகார்கள் மற்றும் மின்தடை சம்பந்தமான தகவல்களுக்கு 1912 அல்லது 18004252912 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் பெருநகர மேற்பார்வைப் பொறியாளர் ஹரிகுமார் தெரிவித்துள்ளார்.