திருச்சி தேசியத் தொழில்நுட்பக் கழகத்தின் மின்னணுவியல் மற்றும் பொறியியல் துறைப் பேராசிரியர் எஸ்.ராகவனின் சேவையைப் பாராட்டி, வாழ்நாள் சாதனையாளர் விருதை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திர மாநிலங்களின் நுண்ணலைப் பொறியியல் ஆராய்ச்சியாளர்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நுண்ணலைப் பொறியியலின் நாளைய விந்தைகள், தொழில்நுட்ப ரீதியில் எதிர்காலத் திட்டங்கள் குறித்து 40-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் கூட்டத்தில் கலந்துரையாடினர்.
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, கூட்ட நிறைவில் திருச்சி தேசியத் தொழில்நுட்பக் கழகப் பேராசிரியர் எஸ். ராகவனுக்கு நுண்ணலைப் பொறியியலில் அவரது சேவையைப் பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கினார். புதுச்சேரி பல்கலைக்கழகப் பேராசிரியர் சண்முகநாதன் உட்பட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.