பல்வேறு மருத்துவக் குணங்கள் உடைய ஆந்திர மாநில நாவல்பழம் திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் விற்பனைக்கு வந்துள்ளதால் பொதுமக்களும் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
பொதுவாக நாவல் பழம் அதிக மருத்துவக் குணங்களை உடையது. முக்கியமாக சர்க்கரை நோயாளிகள் இப்பழத்தை சாப்பிட்டால் ஓரளவு கட்டுப்படுத்துவதுடன் ரத்த சோகை நோயையும் சரி செய்ய உதவுகிறது. ஆந்திர மாநிலத்தில் விளைந்த இப்பழம் திருச்சி மாநகரில் பல இடங்களில் அமோகமாக விற்பனையாகிறது. நாவல்பழம் விற்பனை செய்பவர்கள் பலரும் தினசரி 30 கிலோவுக்கு மேல் விற்பதாகவும்,பொதுமக்கள் இதை ஆர்வமுடன் வாங்கிச் செல்வதாகவும் கூறுகின்றனர்.
திருச்சி குட்ஷெட் பாலத்தில் நாவல்பழம் விற்பனை செய்யும் வியாபாரியான சமயபுரம் அருகே பழுவூர் கிராமத்தைச் சேர்ந்த எம்.சாமிநாதன் என்பவர் கூறுகையில், நாவல் பழத்தில் ஆந்திர மாநில பழமும், நாட்டுப் பழமும் கடந்த 8 ஆண்டுகளாக இதே இடத்தில் விற்பனை செய்து வருகிறேன். ஆந்திர பழம் பெரியதாகவும், அடிபடாததாகவும், அழுகாத பழமாகவும் இருக்கும்.ஏனெனில் இது கையால் பறிக்கப்படக்கூடியது. இதன் விலையும் அதிகம். ஒரு கிலோ ரூ.120க்கு வாங்கி ரூ.200 வரை விற்பனை செய்கிறோம். தினமும் 30 கிலோ வரை விற்பனையாகிறது. இப்பழம் வைகாசியில் தொடங்கி, ஆனி மற்றும் ஆடி மாதம் வரை விற்பனையாகும். அதன்பின்பு நாட்டு நாவல் பழம் விற்பனைக்கு வரும். வாகனங்களில் செல்வோர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர் என்றார்.