வெற்றியைத் தக்க வைக்க கடின உழைப்பும், சிறந்த பயிற்சியும் தேவை என்றார் திருச்சி மாநகரக் காவல் துணை ஆணையர் (குற்றம் மற்றும் போக்குவரத்து) ஆ. மயில்வாகனன்.
மக்கள் சக்தி இயக்கம் சார்பில், திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 2018-19 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், தொடர்ந்து 7 ஆண்டுகளாக 100 சதவிகிதம் தேர்ச்சியை வழங்கி வரும் ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று, மாணவிகள் ஜே.கீர்த்தனா, பி. ஈஸ்வரி, ஆர்.வைத்தீஸ்வரி மற்றும் ஆசிரியர்களுக்கு ரொக்கம் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கி மேலும் பேசியது: இப்பள்ளி 7 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பில் 100 சதவிகித தேர்ச்சிபெற்று வருவதென்பது சாதாரண செய்தி அல்ல. ஆர்வமும் தொடர் உழைப்பும் விடா முயற்சியும் இத்தகையச் சாதனையை நிகழ துணைநிற்கிறது. வெற்றி பெறுவதற்கு பெரும் முயற்சி தேவை. வெற்றியை தக்க வைக்க கடின உழைப்பும் சிறந்த பயிற்சி முறையும் தேவை.
அரசுப்பள்ளியில் தான் சமூகத்தை சக மாணவர்களை , வாழ்வியலை, சகோதரத்துவத்தை நிறைய கற்றுக் கொள்ள முடியும். தொடர்ந்து இந்தப் பள்ளியின் வளர்ச்சிக்கு துணைபுரியும் மக்கள் சக்தி இயக்க உறுப்பினர்களை பாராட்டுகிறேன் என்றார்.
விழாவுக்கு பள்ளி கல்வி வளர்ச்சிக்குழு ஆலோசகர் ராமசாமி தலைமை வகித்தார். மக்கள் சக்தி இயக்க மாநில ஆலோசகர் கே.சி. நீலமேகம், மாநில துணைப் பொதுச்செயலர் வெ.இரா.சந்திரசேகர்,ஆலோசகர் சி.தங்கவேல் முன்னிலை வகித்தனர் . செயலர் ஆர். வாசுதேவன்வரவேற்றார்.
தண்ணீர் அமைப்பு இணைச் செயலர் மற்றும் உதவிப்பேராசிரியர் கி.சதீஷ்குமார் , உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் டி.தியாகராஜன், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் தனலெட்சுமி , மக்கள்சக்தி இயக்க மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ உள்ளிட்ட பலரும் விழாவில் பங்கேற்றனர்.