துறையூர்: துறையூரில் தற்கொலை செய்து கொள்ள கிணற்றுக்குள் குதித்த நண்பரை காப்பாற்ற முயன்ற இளைஞர் பலத்த காயமடைந்தார்.
துறையூர் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் சுபாஷ் (20). தனது காதல் கைகூடாததால் விரக்தியடைந்து, காலனிக்குப் பின்பகுதியிலுள்ள 70 அடி கிணற்றில் செவ்வாய்க்கிழமை குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதை கண்ட அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் க. சிவா (18) கிணற்றுக்குள் குதித்தார். இதில் கிணற்றின் 10 அடி திட்டில் விழுந்த சுபாஷ் காயமின்றி தப்பினார். ஆனால் சிவா, 70 அடி பள்ளத்தில் விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.
தகவலறிந்த துறையூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் அப்பகுதிக்குச் சென்று இருவரையும் மீட்டனர். இதில் துறையூர் அரசு மருத்துவமனையில் சிவாவுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.