துறையூர்: துறையூர் அருகே பேருந்தில் அரசு பெண் ஊழியரிடம் தவறாக நடந்து கொண்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்.
துறையூர் அருகிலுள்ள கோட்டாத்தூரைச் சேர்ந்த அருள்குமார் மனைவி சுலோச்சனா (40). துறையூர் வணிகவரி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.
திங்கள்கிழமை பணி முடிந்து அரசு நகரப் பேருந்தில் கோட்டாத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த இளைஞர், சுலோச்சனாவிடம் தவறாக நடந்து கொண்டாராம். மேலும், செல்லிடப்பேசி மூலம் நண்பர்களை வரவழைத்து, கோட்டாத்தூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து சுலோச்சனாவை பின்தொடர்ந்து சென்றாராம்.
இதுகுறித்து செல்லிடப்பேசி வாயிலாக துறையூர் காவல் நிலையத்துக்கு சுலோச்சனா தகவல் அளித்தார்.
இதன் பேரில் கோட்டாத்தூர் சென்ற போலீஸார், கீழக்குன்னுப்பட்டி மணி மகன் பிரசாந்த்தை(21) கைது செய்தனர். மேலும் தப்பியோடிய கீழக்குன்னுப்பட்டி பாலக்குமார் மகன் பெரியண்ணன், கோட்டாத்தூர் அசோகன் மகன் பரத் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.