திருச்சி: திருச்சி மாநகராட்சி பகுதிகளில் சேகரமாகும் மக்காத கழிவுகளை பெற்றுக் கொள்ள, சமயபுரத்திலுள்ள தனியார் சிமென்ட் ஆலைக்கு 5 ஆண்டு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், மாநகராட்சி ஆணையர் ந.ரவிச்சந்திரனும், தண்டபாணி சிமென்ட் ஆலைத் துணைத் தலைவர் மு. முத்துக்கருப்பனும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பரிமாறிக் கொண்டனர். இதைத்தொடர்ந்து, மாநகராட்சி ஆணையர் ந. ரவிச்சந்திரன் கூறியது: இந்த ஒப்பந்தத்தின்படி மாநகராட்சிப் பகுதிகளில் சேகரமாகும் பயன்படுத்தவே முடியாத மக்காத கழிவுகளை தண்டபாணி சிமென்ட்ஸ் ஆலை, தனது உற்பத்திக்கான எரிபொருளாக பயன்படுத்திக் கொள்ளும்.
நுண்ணுயிர் உரம் செயலாக்க மையங்களில் சேகரிக்கப்படும் நெகிழிப் பொருள்கள், துணிகள்,டயர்கள் மற்றும் மக்காத கழிவுகளை எடுத்துச் செல்ல 5 ஆண்டு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 1000 டன் வரையிலான நெகிழி கழிவுகள் வழங்கப்பட உள்ளன என்றார் அவர்.