திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் பிரபல ரெளடியை செவ்வாய்க்கிழமை அதிகாலை கொன்ற இளைஞரை சமயபுரம் போலீஸார் கைது செய்தனர்.
சமயபுரம் அருகே மாகாளிகுடி கிராமத்தைச் சேர்ந்த பழனியாண்டி மகன் ஆனந்தன் (35). இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். பிரபல ரெளடியான இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பெரம்பலூர் மாவட்டத்தில் இவர் வசித்து வந்த நிலையில் சமயபுரம் அருகே பள்ளிவிடை கிராமத்தைச் சேர்ந்த விஜய் (22) என்பவரின் மனைவியுடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. இதுகுறித்து விஜய் பலமுறை ஆனந்தனை கண்டித்தும் பயனில்லையாம். திங்கள்கிழமை மதியம் தனது மனைவியை பார்க்க ஆனந்தன் வந்ததால் கடும் கோபமடைந்த விஜய் தனது மனைவியைத் தாக்கியதுடன் தப்பியோடிய ஆனந்தனை பல இடங்களில் தேடியுள்ளார்.
இதையறிந்த ஆனந்தன் இடுப்பில் பட்டாக் கத்தியுடன் தலைமறைவாக இருந்துள்ளார். செவ்வாய்க்கிழமை அதிகாலை மதுபோதையில் இருந்த அவர் சமயபுரம் நால்ரோட்டில் இருந்த ஒரு விறகு கடையில் படுத்து தூங்கியுள்ளார்.
இதையறிந்த விஜய், அங்கு சென்று ஆனந்தன் தலையில் கல்லைப் போட்டு அவரைக் கொலை செய்தார். தகவலறிந்த சமயபுரம் காவல் ஆய்வாளர் மதன் உள்ளிட்ட போலீஸார் ஆனந்தன் சடலத்தைக் கைப்பற்றி, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விஜய்யை கைது செய்தனர்.