திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே வீடு புகுந்து நகை, பணம், செல்லிடபேசி, கார் திருடப்பட்டது.
மணப்பாறையை அடுத்த இந்திராநகரை சேர்ந்தவர் அப்துல்சலீம் மகன் அப்பாஸ். வையம்பட்டி அருகே ஆசாத்ரோடு பகுதியில் கார் மெக்கானிக் பட்டறை வைத்துள்ள இவர் தொழில் காரணமாக அதே பகுதியில் குடும்பத்துடன் வசித்தும் வருகிறார். திங்கள்கிழமை இரவு மணப்பாறை சென்று வீடு திரும்பிய அப்பாஸ், தனது மனைவி யாஸ்மின், மகன் சுகைல் ஆகியோரை வீட்டில் விட்டுவிட்டு தனது பட்டறைக்கு சென்றுள்ளார். பின்னர் அவரது மனைவி, தனது மகனுடன் மொட்டை மாடிக்கு சென்று உறங்கியுள்ளார். நள்ளிரவு வீடு திரும்பிய அப்பாஸ், வீடு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம், செல்லிடபேசி, வீட்டில் நிறுத்தியிருந்த காரையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. புகாரின்பேரில் வையம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.