திருச்சி கூத்தூர் விக்னேஷ் வித்யாலயா பள்ளியில் சென்னை பிட்ஜி நிறுவனம் சார்பில் நீட் தேர்வுக்கான இலவசப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், விக்னேஷ் கல்விக் குழுமத் தலைவர் வி. கோபிநாதனுடன் பிட்ஜிநிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் அபிலேஷ், துணை இயக்குநர் தியாகராஜன் ஆகியோர், நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்காக மாணவ, மாணவிகளுக்கு இலவசமாகப் பயிற்சியளிப்பதற்கான ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, நீட் உள்ளிட்ட தேர்வுகளை எதிர்கொள்வது குறித்த பயிற்சியை விக்னேஷ் கல்விக் குழுமத் தலைவர்
கோபிநாதன் தொடக்கி வைத்து பேசியது:
மாணவ, மாணவிகளின் வழக்கமான கல்விக்குப் பாதிப்பு ஏற்படாதவகையில், பள்ளி வேலை நேரத்துக்குப் பிறகு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். 9,10,11 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இப்பயிற்சி வழங்கப்படும். ஜூன் மாதம் முதல் விடுதி வசதியும் ஏற்படுத்தப்படும் என்றார்.
நிகழ்வுக்கு, கல்வி அறங்காவலர் லட்சுமிபிரபா கோபிநாதன், இயக்குநர் வரதராஜன், பள்ளி முதல்வர் பத்மா முன்னிலை வகித்தனர். பிட்ஜி நிறுவன துணை இயக்குநர் தியாகராஜன், தலைமை செயல் அலுவலர் அபிலேஷ் மாணவ, மாணவிகளிடம் உரையாற்றினர்.