தமிழகத்தில் 29ஆவது கூட்டுறவு பெட்ரோல், டீசல் விற்பனை நிலையம் திறப்பு

தமிழகத்தின் 29ஆவது கூட்டுறவு பெட்ரோல், டீசல் விற்பனை நிலையம் திருச்சியை அடுத்த மண்ணச்சல்லூர் அருகே திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் 29ஆவது கூட்டுறவு பெட்ரோல், டீசல் விற்பனை நிலையம் திருச்சியை அடுத்த மண்ணச்சல்லூர் அருகே திறக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவுத்துறை சார்பில் நியாயவிலைக் கடைகள், பண்டகச்சாலை, பசுமைப் பண்ணை கடைகள்,  உரவிற்பனை நிலையங்கள் நடத்துவதைப் போன்று மக்களுக்கு தரமான மற்றும் சரியான அளவுகளில் பெட்ரோல், டீசல் கிடைத்திடும் வகையில் எரிபொருள் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஏற்கெனவே 28 இடங்களில் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வரும் நிலையில், 29ஆவது நிலையம் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டத்துக்குள்பட்ட பூனாம்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்துக்கு சொந்தமான நிலத்தில் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து இந்த விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. புதிய விற்பனையகத்தை திறந்து வைத்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜு பேசியது: தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் சார்பில் திறக்கப்படும் 4ஆவது விற்பனை நிலையமாகும். ஏற்கெனவே, கோடம்பாக்கம், கோயம்பேடு, கடலூரில் விற்பனை நிலையங்கள் உள்ளன. இதுமட்டுமல்லாது கூட்டுறவுத்துறை மூலம் திறக்கப்படும் 29ஆவது விற்பனை நிலையமாகும். மேலும், 19 விற்பனை நிலையங்கள் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழக மக்களுக்கு சரியான விலையில், தரமான பொருள்கள் வழங்குவதை உறுதி செய்யும் துறையாக கூட்டுறவுத்துறை விளங்குகிறது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்காற்றி வருகிறது. அரிசி, பருப்பு விலை உயர்ந்தால் அவற்றை குறைந்த விலையில் வழங்க கூட்டுறவு பண்டகச் சாலைகள் முன்வருகின்றன. இதேபோல, பசுமைப் பண்ணை கடைகள் மூலம் காய்கறிகள் மலிவான விலைக்கு வழங்கப்படுகிறது. மக்களின் தேவையறிந்து பணியாற்றுவதில் கூட்டுறவுத்துறை முன்னோடியாக உள்ளது என்றார் அமைச்சர்.
இந்த விழாவில், தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன், ஆட்சியர் சு. சிவராசு,  மாநிலங்களவை உறுப்பினர் டி. ரத்தினவேல், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை நிலைய மேலாண்மை இயக்குநர் முருகன், கூட்டுறவு இணைப் பதிவாளர் ரவிச்சந்திரன்,  இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் துணை விற்பனை பொதுமேலாளர் பாபு நரேந்திரா, எம்எல்ஏ பரமேஸ்வரி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com