அறிவியல் வினாடி-வினா போட்டிகளில் முதல் இரு இடங்களைப் பிடித்த மாணவர்கள் இருவருக்கு பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சியை கட்டணமில்லாமல் மேற்கொள்வதற்கான ஆணையை தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் எஸ். உமா வழங்கினார்.
தமிழக பல்கலைக் கழகங்களில் பயிலும் அறிவியல் மாணவ, மாணவிகளிடையே ஆய்வு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் வாழையின் தோற்றம் எனும் தலைப்பில் ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கு, திருச்சியை அடுத்த தாயனூரில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கருத்தரங்கை தொடக்கி வைத்து துருக்கி இஸ்தான்புல் பல்கலைக் கழக விஞ்ஞானியும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான ஆல்பர்ட் பிரேம்குமார் பேசினார். தொடர்ந்து மாணவர், மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் அளித்தார்.
தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் எஸ். உமா, மையத்தின் முதன்மை விஞ்ஞானிகள் எஸ். பாக்கியராணி, எம். மயில்வாகனன், ஐ. ரவி ஆகியோர் பேசினர். தொடர்ந்து அறிவியல் வினாடி-வினா போட்டிகளும் நடைபெற்றன. இதில், முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை பெற்ற காமராஜர் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் எ. பிரபாகரன், ஹெச்.எம். ஓம்பிரகாஷ் ஆகியோருக்கு, தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் கட்டணமின்றி பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான ஆணைகளை இயக்குநர் எஸ். உமா வழங்கினார். போட்டிகளில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முனைவர் வ.குமார் நன்றி கூறினார்.