மாணவர்கள் மனிதநேயத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு ஆணையத்தின் தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான பி. ராஜேந்திரன்.
திருச்சி தூயவளனார் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல்லூரி நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அவர் பேசியது: மாணவர் பருவத்தில் ஆசிரியர்கள் காட்டக்கூடிய கண்டிப்பு தான் அவர்களின் வாழ்க்கையில் வெற்றிபடிகட்டுகளாக மாற்றுகிறது. இளைஞர்கள் இளமையை சொத்தாக கருதி அதை சாதிக்க பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
கூட்டு குடும்பங்களாக இருந்த குடும்பங்கள் புரிந்துணர்வு இல்லாததால் மனிதநேயத்திற்கு சவால்விடும் வகையில் பிள்ளைகள் பெற்றோர்களை கைவிடுவதால் பெற்றோர் இல்லாத வீடுகள் உருவாகிவிட்டது. முதியோர் இல்லங்கள் அதிகரித்து வருகிறது. வருங்காலத்தில் மாணவர்களும் பெற்றோர் ஸ்தானத்தில் இருக்க வாய்ப்பு இருப்பதால் படிக்கும் காலத்திலேயே மனிதநேயத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து விஜயா வங்கியின் தலைவர் சங்கர நாரயணண் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்வில் கல்லூரி அதிபர் லெயோனார்டு, முதல்வர் ம.ஆரோக்கியசாமி சேவியர், கல்லூரி செயலர் அந்தோனி பாப்புராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.