மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திருச்சி, கரூர், நாமக்கல், வேலூர் ஆகிய மாவட்டங்களில் பறக்கும்படையினர் வெள்ளிக்கிழமை நடத்திய வாகனச் சோதனைகளில் ரூ. 8.76 கோடி மதிப்புள்ள காசோலைகள், புரோநோட்டுகள், ரொக்கம்
ரூ.10.58 லட்சம் ரொக்கம், 3.34 கிலோ வெள்ளி நகைகளை பறிமுதல் செய்தனர்.
திருச்சி அருகே திருப்பராய்த்துறை சுங்கச்சாவடியில் நில எடுப்பு தனி வட்டாட்சியர் எம். சுமதி தலைமையில் பறக்கும்படையினர் அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, கையெழுத்திடப்பட்ட ரூ. 8 கோடியே 75 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 192 காசோலைகள் , ரூ. 1.20 லட்சம் மதிப்பில் 2 புரோநோட்டுகளை பறிமுதல் செய்து, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ப. கண்ணன் (29), ரா. மணி (28),மா.பேச்சிமுத்து (20) ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனர்.
திருச்சி- வயலூர் சாலை ரெங்கா நகரில் தனிவட்டாட்சியர் இளவரசி தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் ரூ.1.58 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் திருச்சியிலுள்ள தனியார் பள்ளியின் தலைமையாசிரியர் கிளாடிஸ் என்பதும், உரிய ஆவணங்கள் இல்லாமல் பணத்தை கொண்டு வந்ததும் தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் திருச்சி சார்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதைப் போல, நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதிக்கு உள்பட்ட எருமப்பட்டி அருகே நிலை கண்காணிப்புக் குழுவினர் நடத்திய வாகனச் சோதனையில், 3.34 கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.1.52 லட்சம் ரொக்கம் ஆகியவை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
கரூர் மற்றும் குளித்தலை தொகுதிகளுக்குள்பட்ட பகுதிகளில், உரிய ஆவணம்
இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம் ரூ.3.52 லட்சத்தை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகனத் தணிக்கையின்போது, உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 3.12 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.