மக்களவைத் தேர்தலையொட்டி, திருச்சியில்பறக்கும் படையினர் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வாகன சோதனையில் ரூ. 1லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி குழுமணி-லிங்கநகர் சோதனைச்சாவடியில் பறக்கும் படை வட்டாட்சியர் வசந்தா தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்ட போது, அதில் ரூ.1 லட்சம் பணம் இருப்பது தெரிய வந்தது.
விசாரணையில், காரிலிருந்தவர் ஏகிரிமங்கலம் சுந்தராஜன் என்பதும், வீட்டில் நடைபெறவுள்ள காதணி விழாவிற்காக ஆடைகள் வாங்க திருச்சிக்கு வந்ததும் தெரிய வந்தது. இருந்தபோதும் முறையான ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், திருச்சி மேற்கு வட்டாட்சியர் ராஜவேலிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து ரூ.1 லட்சம் அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.