உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு தண்ணீர் அமைப்பு சார்பில் திருச்சி செந்தண்ணீர்புரம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தண்ணீர் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தி நீர் நிலைகளைப் பாதுகாப்போம் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பள்ளி மாணவ,மாணவியரிடம் காண்பித்தும்,தண்ணீரின் முக்கியத்துவம் குறித்தும் திருச்சியில் செயல்படும் தண்ணீர் அமைப்பு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அமைப்பின் செயலர் கே.சி. நீலமேகம், நிர்வாகிகள் ஆசிரியர்கள் ஜெயந்தி, சந்திரா, அருணா உள்பட பள்ளி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.
பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி: தண்ணீர் அமைப்பின் சார்பில் வெள்ளிக்கிழமை உலக தண்ணீர் தின விழா பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இணைச் செயலர் பேரா.கி. சதீஷ்குமார் பேசினார். நிறைவாக மாணவர்கள் நீர்நிலை பாதுகாப்பு குறித்து உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டனர்.
தேசிய கல்லூரியில்: திருச்சி தேசிய கல்லூரியின் 4ஆவது பெண்கள் பட்டாலியன் என்சிசி சார்பில் உலக தண்ணீர் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த பேரணிக்கு கல்லூரி முதல்வர் ஆர். சுந்தரராமன் தலைமை வகித்தார். இந்த பேரணியில் பட்டாலியன் சார்பாக சுபேதார்கள் பாலராஜூ, அசோக்குமார், லட்சுமணன், சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் பெண்கள் அதிகாரி லெப்டினன்ட் வனிதா செய்திருந்தார். இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.