முன்விரோதத்தில் வீடு புகுந்து கத்தியால் குத்தியதில் காயமடைந்த பெண்ணுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உறையூர் பாண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த யோகராஜ் மனைவி வனஜா(45). திங்கள்கிழமை காலை இவர் வீட்டில் வேலை செய்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் வனஜாவை கத்தியால் குத்த முயற்சிதார். சுதாரித்துக் கொண்ட வனஜா மர்ம நபரிடமிருந்து கத்தியை பறிக்க முயன்ற போது கையில் காயம் ஏற்பட்டது.
இதற்கிடையில் அங்கிருந்து தப்பியோட முயற்சித்த மர்ம நபரை அருகிலிருந்தவர்கள் பிடித்து உறையூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் , வீட்டின் அருகே வசிக்ககூடிய வாசுதேவன்(62) என்பதும், சொத்து பிரச்சனை தொடர்பாக இருந்த முன்விரோதத்தில் கத்தி குத்து சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. காயமடைந்த வனஜா திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக உறையூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.