முன்விரோதத்தில் கட்டட தொழிலாளியை அரிவாளால் வெட்டிய கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி முடிகண்டம் அருகே உள்ள கோலார்பட்டியைச் சேர்ந்தவர் தாமஸ்(35). கட்டட தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன்(31) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் தாமஸ் வியாழக்கிழமை காலை தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த கிருஷ்ணன் அவரது நண்பர்கள் கொத்தமங்கலம் கோபால்(24), ஸ்ரீரங்கம் ரவி(23), மேலகொண்டயம்பேட்டை கார்த்திகேயன்(23), சுந்தர் ஆகியோர் தாமஸை வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதை கண்ட அப்பகுதி மக்கள் மணிகண்டம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தாமஸை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து கிருஷ்ணன், கோபால், சுந்தர் ஆகியோரை வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனர். தலைமறைவாக உள்ள ரவி, கார்த்திகேயனை தேடி வருகின்றனர்.