திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு ராஜகலைஞன் விருது வழங்கப்பட்டது.
தமிழகப் பண்பாட்டுக் கழகம் சார்பில் தேவர் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, கழகத்தின் கௌரவத் தலைவர் எம். உஸ்மான் சாஹிப் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் எஸ்.என்.ஜாகீர் உசேன், ஏ. ரவிச்சந்திரன், எம்.ரஜினி முன்னிலை வகித்தனர்.
திரைத்துறையில் சிறந்த கலைசேவை ஆற்றியமைக்காக திரைப்பட இயக்குநரும், நடிகருமான ஆர்.சுந்தர்ராஜன், நடிகர் பூவிலங்கு மோகன், திரைப்படப் பாடகி சின்னபொண்ணு குமார், சின்னத்திரை நடிகை எம். சுஹாசினி, பட்டிமன்ற பேச்சாளர் ஏ.சசிகலா ஆகியோருக்கு ராஜகலைஞன் விருதுகளை கலைப் பண்பாட்டுத் துறையின் இணை இயக்குநர் இரா. குணசேகரன் விருதுகளை வழங்கிப் பேசினார். இதுபோல, ஆசிரியர்களின் கல்விச்சேவையைப் பாராட்டி, நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் விழாவில் விருது வழங்கப்பட்டது.
விழாவில் எழுத்தாளர் மணவை பொன் மாணிக்கம், இலக்கியச் சொற்பொழிவாளர் காரைக்குடி ஜி. பூஜிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பரதம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக, தமிழகப் பண்பாட்டுக் கழகச் செயலர் எம். கதிரேசன் வரவேற்றார். நிறைவில் பொருளாளர் எம்.ஜேசுபால்ராஜ் நன்றி கூறினார்.