திருச்சி விமானநிலையத்தில் ரூ.66.26 லட்சம் கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு திங்கள்கிழமை அதிகாலை வந்த ஏர் ஏசியா விமான பயணிகளின் உடைமைகளை வான் நுண்ணறிவு சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அப்போது, புதுக்கோட்டையைச் சேர்ந்த முருகேஷ் (34) என்பவர் கொண்டு வந்த பொருளின் மீது சந்தேகம் ஏற்பட்டது.
அதனை அதிகாரிகள் சோதனையிட்டபோது, தங்கத்தை காகிதப் படலமாக மாற்றி மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. 2 கிலோ 95 கிராம் எடையுள்ள இந்த தங்கக் காகிதப் படலங்களின் மதிப்பு ரூ. 66 லட்சத்து 26 ஆயிரத்து 485 ஆகும். இந்த தங்கத்தை யாருக்காக கொண்டு வந்தார் என்பது குறித்தும், தங்கத்தை கொடுத்து அனுப்பிய நபர்கள் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் கடந்த சில நாள்களாக கடத்தல் தங்கம் தொடர்ச்சியாக பிடிபட்டுவந்த நிலையில் ஒரே நபரிடம் 2 கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.