உறையூர் பாண்டமங்கலம் அருள்மிகு காராளம்மன் திருக்கோயில் தேர்த்திருவிழா புதன்கிழமை தொடங்கியது.
பாண்டமங்கலத்தில் குடமுருட்டி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இக்கோயில் உறையூர் வெக்காளியம்மன் திருக்கோயிலின் உபகோயிலாக விளங்கி வருகிறது. இங்கு காராளம்மன், தட்சிணாமூர்த்தி சுவாமிகள் அருள்பாலித்து வருகின்றன. இக்கோயிலின் நிகழாண்டு வைகாசித் தேர்த்திருவிழா காப்புக் கட்டுதலுடன் புதன்கிழமை தொடங்கியது.
இதையொட்டி காராளம்மன், தட்சிணாமூர்த்தி, மதுரைவீரன் உள்ளிட்ட பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகமும்,விசேஷ தீபாராதனைகளும்
நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, மே 27 ஆம் தேதி 2 ஆவது காப்புக் கட்டுதலும், 28 ஆம் தேதி காளிஅவிட்டமும், 29 ஆம் தேதி சுத்த பூஜையும் நடைபெறுகிறது.
மே 30,31 தேதிகளில் தேரோட்டம் நடைபெறும். ஜூன் 1 ஆம் தேதி மஞ்சள் நீராடுதல் மற்றும் அம்மன் குடிபுகுதலுடன் திருவிழா நிறைவுபெறும். திருவிழா ஏற்பாடுகளை அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில் உதவி ஆணையர் சு.ஞானசேகர் மற்றும் பாண்டமங்கலம் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.