திருச்சியில் பிரபல நிறுவனம் பெயரில் வாகன உதிரிப் பாகங்கள் விற்றதாக ஆட்டோமொபைல்ஸ் நிறுவன மேலாளரை போலீஸார் கைது செய்தனர்.
திருச்சியில் பிரபல நிறுவனத்தின் பெயரில் இருசக்கர மற்றும் மூன்று சக்கர உதிரிப்பாகங்களை போலியாகத் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக சதீஸ்குமார் என்பவர் காப்புரிமை அதிகாரியிடம் (சென்னை) புகார் செய்தார். அதன்பேரில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு ஆய்வாளர் தங்கவேல் தலைமையில் தனிப்படையினர் திருச்சியில் புதன், வியாழக்கிழமைகளில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் பிரபல நிறுவனம் பெயரில் போலி உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யப்படுவதுடன் அதற்கான ரசீதுகளும் வழங்கப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஒரு கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த போலி உதிரிப் பாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ. 1.62 லட்சம். மேலும் போலி உதிரி பாகங்களை விற்ற கடையின் மேலாளர் ராதாகிருஷ்ணனை கைது செய்து விசாரிக்கின்றனர்.