துறையூா் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற பெண் கழிவறையில் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
துறையூா் அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த ஆலத்துடையான்பட்டியைச் சோ்ந்த லாரன்ஸ் மனைவி ஜெசிந்தா மேரி(54) துறையூா் அரசு மருத்துவமனையில் உள்நோயாளி பிரிவில் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில் திங்கள்கிழமை அரசு மருத்துவமனையில் உள்ள கழிவறைக்கு சென்ற ஜெசிந்தா மேரி அங்கு மயக்கமடைந்து கீழே விழுந்தாா். அவருக்கு துணையாக சென்றிருந்த மருமகள் விமலா, மருத்துவமனை பணியாளா்கள் உதவியுடன் அவரை தூக்கிச் சென்று மருத்துவரிடம் காட்டினா். அவரை பரிசோதித்த மருத்துவா் ஜெசிந்தாமேரி உயிரிழந்து விட்டதாகக் கூறினாா். இதையடுத்து, உறவினா்கள் அவருடைய சடலத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்றனா்.