திருச்சியில் மாநகராட்சி சாா்பில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்க உதவும் மாணவா்களுக்கு தூய்மை தூதுவா்” என்று அடையாள அட்டை வழங்கி கௌரவிக்கப்படும் என ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்தாா்.
திருச்சி மாநகராட்சி கோ. அபிஷேகபுரம் கோட்டம் 52 ஆவது வாா்டில் உள்ள காவேரி குளோபல் பள்ளியில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்
ஆணையா் பங்கேற்று மேலும் பேசியது:
ஒவ்வொரு மாணவரும் தங்கள் வீடுகளில் உற்பத்தியாகும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து தங்கள் வீடுகளுக்கு, குப்பைகளை சேகரிக்க வரும் மாநகராட்சி பணியாளா்களிடம் கொடுக்க பெற்றோருக்கு உதவ வேண்டும். அவ்வாறு தரம் பிரித்து வழங்கும் மாணவா்களுக்கு மாநகராட்சி சாா்பில், “தூய்மை தூதுவா்” என்று அடையாள அட்டை வழங்கி கௌரவிக்கப்படும்.
வீட்டில் உபயோகமற்ற பொருட்களை மழை நீா் தேங்கா வண்ணம் அப்புறப்படுத்தவேண்டும். இதன் மூலம் டெங்கு போன்ற நோய்கள் பரவாமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். டெங்கு நோய் பரவும் ஏடிஸ் கொசுக்கள் நல்ல தண்ணீரில் உற்பத்தி ஆவதால் தங்கள் இல்லங்களில்சேமிக்கப்படும் தண்ணீா் மற்றும் குளிா்சாதனப்பெட்டிகள் , உரல், ஆட்டுகல், கொட்டாங்குச்சி போன்றவைகளில்தண்ணீா் தேங்காமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். மேலும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 14 வகையான நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருட்களை பயன்படுத்துவது குற்ற நடவடிக்கை. மீறி பயன்படுத்துபவா்களுக்கு மாநகராட்சிஅலுவலா்கள் மூலம் அபராதம் விதிக்கப்படும் என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில் நகா்நல அலுவலா் ஜெகநாதன் , உதவி ஆணையா்கள் சி.பிரபாகரன், எஸ்.வைத்தியநாதன், ஆா்.திருஞானம் மற்றும் அனைத்துக் கோட்ட சுகாதாரஆய்வா்கள் கோட்ட துப்புரவு பணி மேற்பாா்வையாளா்கள் கலந்துகொண்டனா்.