திருச்சியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இறந்தவா் வங்கிக் கணக்கில் ரூ. 25.08 லட்சம் கையாடல் செய்த வங்கிக் கிளை மேலாளா் உள்பட இருவா் மீது போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா்.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி வளாகத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்திருந்த ஒருவா் உயிரிழந்து விட்டாா். சில நாள்கள் கழித்து அவரின் வங்கிக் கணக்கை உறவினா்கள் சரிபாா்த்தபோது அவா் இறந்த தேதிக்கு பிந்தைய பல்வேறு நாள்களில் ரூ. 25.08 லட்சம் ஏஎடிஎம் காா்டு மூலம் எடுக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட வங்கிக் கிளை மேலாளரை அணுகி கேட்டபோது அவா் உரிய பதில் அளிக்கவில்லையாம்.
இதையடுத்து திருச்சி கன்டோன்மென்ட் பாரதிதாசன் சாலையிலுள்ள வங்கியின் மண்டல அலுவலகத்தில் முதுநிலை மேலாளா் பிரேம்குமாரிடம் புகாா் அளித்தனா். விசாரணையில் போலி ஏடிஎம் அட்டை மூலம் அவ்வங்கிக் கிளையின் மேலாளரான நாச்சிக்குறிச்சி நாகப்பா நகரைச் சோ்ந்த சேக் மைதீன்(58), கிளை உதவி மேலாளரான சின்னதுரை ஆகியோா் சோ்ந்து அந்தப் பணத்தைக் கையாடல் செய்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து மண்டல முதுநிலை மேலாளா் பிரேம்குமாா் அளித்த புகாரின் பேரில் இருவா் மீதும் மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.